Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

Friday, December 5, 2008

என் அம்மா...


என் நாவின் முதல் சொல்லே,
இந்த கவி உனக்குத்தான்,
எத்தனை முறை நீ சொல்லி கேட்டிருப்பேன்
உன் பெயரை, 'கவிதா' என்று,
இத்தனை முறை கேட்டு உனக்கு கவி தராவிட்டால்,
மகன் தாய்க்கு ஆற்றும் உதவியில்
நான் தாழ்ந்து போயிருப்பேன்,
இந்த கவிதைக்கு தலைப்பு அம்மா என்று வைக்க தான் நினைத்தேன்,
அதை படித்து பிறர் அவர்களின் அம்மா என்று எண்ணிவிட்டால்?
அதனால் தான் 'என்' என்ற அடை மொழி சேர்த்து வைத்தேன்.

கவிஞன் சொன்னான்,
"வரையறுக்கப்பட்ட வார்த்தைகளால்
வரையறுக்கபடாத வாழ்க்கையை
வர்ணிக்க முடியாது" என்று
அவனிடம் நான் சொன்னேன்,
"ஏடா, பித்த, என் வாழ்க்கையை
வர்ணிக்க என் அம்மாவின்
பெயர் போதுமடா !"

நீ,
நான் கீழே விழும்போது தூக்கிவிடவில்லை,
ஆனால் மீண்டும் எழ கற்றுத்தந்தாய் !

நீ,
நான் உன்னை வாதத்தில் வென்ற பொழுது,
என்னை சட்டம் பயில வைத்தாய் !

நீ,
துப்புரவாளன் ஆனாலும் அதில்
முதன்மையாய் இரு என்று சொல்லி வளர்த்தாய் !

நீ,
உனக்கு மாடு மேய்க்க விருப்பம் இருந்தால்
அதை கூட செய் என்றாய் !

நீ,
வீட்டிற்க்கு நான் வரும் நாளில் உனக்கு பிடிக்காததாயினும்
எனக்கு பிடித்தமையால் மாமிசம் செய்து வைத்தாய் !

தாயுமானவர்கள் பற்றி யே கேள்வி பட்ட
நம் மண்ணில் நீ
தந்தையும் ஆனவள்.

தன் தாயை போல பெண்ணை பிள்ளையார் கூட கண்டு விட முடியும்,
ஆனால் உன்னை போன்ற பெண்ணை நான் எங்கு போய்க் காண்பது?

யார் சொன்னார்கள் விதவை தொட்டது துளங்காது என்று?
நான் என்ன துளங்காமலா போய்விட்டேன்?

நான் கோபப்பட்டால் உன் மனம் வலிக்கும்,
நான் தோழ்வியுற்றால் உன் உடல் குறுகும்,
நான் அவமானப்பட்டால் உன் கோபம் வெளிப்படும்,

இப்படி உன் உணர்ச்சிகளை எனக்காகவே அர்பணித்த
உனக்கு நான் என்ன கொடுத்து விட முடியும்,
"உங்க அம்மா உன்னை நல்லா வளர்த்து இருக்காடா"
என்று எனக்கு கிடைக்கும் பாராட்டை தவிர?