Tuesday, December 30, 2008

இயற்கை எழில் ! ! !


* அன்றொரு நாள்,
தலைவி தலைவனை நினைத்து புன்னை மர நிழலில் புலம்பினாள்;
இன்றைய தலைவி,
புலம்ப புன்னை மரமும் இல்லை,
நல்லதொரு தலைவனும் இல்லை !

* அன்றொரு நாள்,
சகுந்தலை ஒடமிடும்பொழுது துஷ்யந்தனை சந்தித்தாள்;
இன்றைய சகுந்தலை,
குடிக்க ஒரு குவளை நீர் கூட இல்லை !

* அன்றொரு நாள்,
சீதை கருமரங்கள் நிறைந்த அசொகவனத்தில் சிறை இருந்தாள்;
இன்றைய சீதையை
சிறைபடுத்துவது வாகனப் புகையால் வந்த ஆஸ்துமா !

* அன்றோரு நாள்,
ஜடாயுவும், சுக்ரீவனும் இருந்தன மானிட நண்பர்களாய்;
இன்றைய ஜடாயுவும், சுக்ரீவனும்
இருக்கின்றன மானிட நண்பர்களாய் கூண்டினுள்ளே !

* அன்றொரு நாள்,
இயற்கை எழிலுக்கு உவமையாய் பாரதக் கண்டம்;
இன்றைய பாரதக் கண்டத்தில்,
உவமைக் கேள்வியாய், "இயற்கை எனில்???" !!!

Friday, December 19, 2008

சுனாமி என்ற எனிமி ! ! !

சுனாமி என்னும் ஆழி பேரலை என் புகுந்த வீடான சென்னை பட்டினத்தை தாகிய பொழுது எழுதிய வரிகள்...


சுனாமி, எங்களின் எனிமியே !

* இரண்டு தாய்களுக்கு இடையே சச்சரவு,
பூமி குலுங்கி விட்டு நின்றது ஆனால்
கடலே உனக்கு மட்டும் ஏன்
மாற்றாந்தாய் முகம்?
ஒன்றுக்கு இரண்டு அம்மாக்கள்
இருந்தும் உயிரை எடுத்துவிட்டீர்களே !


* பசிக்கிறது என்று சொல்லி இருந்தால்,
உணவிட்டிருப்போம் !
இப்படி பில் பே பண்ணாமல் பல
உயிர்களை உண்டு விட்டாயே ?
சாமியென்றால் சைவம் என்று
நினைத்திருந்தோம் ஆனால் நீ
அசைவம் உண்டு ஆசாமி ஆகிவிட்டாய் !

* காற்று வாங்கதானே வந்தார்கள்,
உன்னை யார் காற்றை எடுக்க சொன்னது ?

* கிரிக்கெட் விளையாடியவர்களை ஆல் ஔட்
செய்த உனக்கு என்ன பெரிய
கும்ப்ளே என்ற நினைப்பா ?

* சீரியல் கில்லர் கூட GAP விட்டு கொல்வான்,
நீ எந்த வகை கில்லர் ஸீ ஷோர் கில்லரா ?

* வாக்கிங் என்றால் இரண்டு கால்தானே,
அவர்களுக்கு நடக்க தெரியாதா ?
நீ ஏன் அவர்களை எட்டுக்கால்கள்
தூக்க வைத்தாய் ?

*உப்பிய உடல்களை துப்பிய உன்னை
அன்னை என்று எப்படி அழைப்பது ?

*உன்னிடம் தான் நிறைய உப்பு நீர் உள்ளதே,
ஏன் எங்கள் கண்களிலும் வர வைத்தாய் ?

*பூமி மட்டுமா எங்கள் தாய்,
நீயும் தாய்தானே ஏன் பேயானாய் ?

*ஆனாலும் தமிழர்களின் விருந்தோம்பல்
சற்று OVER DOSE தான்,
அழையா விருந்தாளியான உனக்கு
ஆயிரக்கணக்கில் உணவிட்டுவிட்டார்கள் !

* இதோடாவது பசியைத் ணித்துக்கொள்,
இல்லை யாரும் இல்லது தனிமையில்
கொந்தளிப்பாய் !

*மணல் வீடுகளை களைத்திருந்தால்
பரவாயில்லை ஆனால் நீ பல
மன(ம்) வீடுகளை களைத்துவிட்டாய் !


*உன்னை ஊரைவிட்டு ஒதுக்கி
வைக்க நாட்டாமைகள் கூட
உயிரோடு இல்லை !

நீ எப்படி வேண்டுமானாலும் இரு
ஆனால் உன் எல்லைக்குள் இரு !!!

Monday, December 8, 2008

என் அன்பான எதிரிக்கு ...


என் அன்பான எதிரிக்கு, என்னவளின் காதலனே, வாழ்த்துக்கள் !
உன் மேல் எனக்கு கோபமில்லை,
ஆனால் பொறாமை உண்டு !
எல்லாவிதத்திலும் உன்னை விட சிறந்தவன்,
ஆனால் அவளுக்கு உன்னதான்டா பிடிச்சிருக்கு !

என் ப்ரிய எதிரியே,
உன் அடி பேரிடி,
என்னால் உன்னை வெருக்க இயலாது,
ஏன் எனில் அவளுக்கு பிடித்து எல்லாம்
எனக்கும் பிடித்தமை ஆயின !

ஆனால் எனக்கென்று சில வெற்றிகள் உண்டு,
உன்னுடன் இருக்கும் நேரத்தை விட அவள்
ஏன் மனதுள் இருக்கும் நேரங்கள் அதிகம் !
அவள் உன்னைக்கூட ஒருகால் மறந்து போகலாம்,
(அப்படி ஒரு நிலை உனக்கு வர வேண்டாம், அதன் வலி உணர்ந்தவன்...)
ஆனால் என் கவிதைகளை ஒருகாலும் மறக்கமாட்டாள் !
அவளுகென்று நீ தாஜ் மஹாலை எழுப்பவில்லை,
நான் என் இரத்தத்தில் அமரா கவி படைத்துள்ளேன் !
நீ அவளை நினைக்கும் நேரம் அதிகம்,
நான் அவளை மறந்தால் வந்துவிடு என் மரணத்திற்கு !

நீ என்னை வெட்டினாலும் கோபப்படமாட்டேன்,
ஆனால் அவளை வருந்த விட்டால் உன் உடலுக்கு விடை கொடுத்து விடு !

எதிரிக்கு அதிலும் தோற்றவனுக்கு
கருணை காட்டுவது தமிழர் பண்பாடு,
அதன்படி தோற்றவன் என்ற முறையில்
என் வேண்டுகோள்,
அவளைக் கைவிட்டுவிடாதே,
அவள் தாங்கமாட்டாள்,

நன்றி,

- இப்படிக்கு தோற்றவன்

Friday, December 5, 2008

நாட்டுப்புறப்பாடல் - காதல் கலம் ! ! !


ஏர் புடிச்சி நா உழுவயிலே,
சீர் எடுத்து வந்தா உன் ஆத்தா !

அண்ண மவன் எனக்கு கொடுக்கவே
உன்ன பெத்த உன் ஆத்தா !

வாங்க அத்தனு நா அழைக்கயில,
அவ முந்தானையில மறைஞ்ச தங்கசிலயே,
உன் குதிக்கால் அழகுல என்ன கொததிட்டு போன கொக்கே !.

அப்ப ஒருக்கா நீ ஆத்துல குளிக்கயில,
அடிநீச்சல் அடிச்சி உன் கால நான் இழுக்கயில,
நீ 'முதல. முதல' னு கத்த, அது
என் காதுல 'முத்தம், முத்தம்' னு விழ;
நீ கேட்டத மறுக்காம நானும் கொடுத்தேன் !
அப்ப செவந்த உன் உதடு இன்னும் அப்படியே இருக்கா?

தை மாசம் பரிசம் போட மாமாவ வரச் சொல்லு,
அதுக்கு முன்ன உங்கண்ணன மாமாவாக்க நா வழி சொல்றேன்,
பொழுது சாஞ்சி, பூமுடிச்சி தோப்பு பக்கம்
வா என் மாமரத்துக் கிளியே ! ! !

என் அம்மா...


என் நாவின் முதல் சொல்லே,
இந்த கவி உனக்குத்தான்,
எத்தனை முறை நீ சொல்லி கேட்டிருப்பேன்
உன் பெயரை, 'கவிதா' என்று,
இத்தனை முறை கேட்டு உனக்கு கவி தராவிட்டால்,
மகன் தாய்க்கு ஆற்றும் உதவியில்
நான் தாழ்ந்து போயிருப்பேன்,
இந்த கவிதைக்கு தலைப்பு அம்மா என்று வைக்க தான் நினைத்தேன்,
அதை படித்து பிறர் அவர்களின் அம்மா என்று எண்ணிவிட்டால்?
அதனால் தான் 'என்' என்ற அடை மொழி சேர்த்து வைத்தேன்.

கவிஞன் சொன்னான்,
"வரையறுக்கப்பட்ட வார்த்தைகளால்
வரையறுக்கபடாத வாழ்க்கையை
வர்ணிக்க முடியாது" என்று
அவனிடம் நான் சொன்னேன்,
"ஏடா, பித்த, என் வாழ்க்கையை
வர்ணிக்க என் அம்மாவின்
பெயர் போதுமடா !"

நீ,
நான் கீழே விழும்போது தூக்கிவிடவில்லை,
ஆனால் மீண்டும் எழ கற்றுத்தந்தாய் !

நீ,
நான் உன்னை வாதத்தில் வென்ற பொழுது,
என்னை சட்டம் பயில வைத்தாய் !

நீ,
துப்புரவாளன் ஆனாலும் அதில்
முதன்மையாய் இரு என்று சொல்லி வளர்த்தாய் !

நீ,
உனக்கு மாடு மேய்க்க விருப்பம் இருந்தால்
அதை கூட செய் என்றாய் !

நீ,
வீட்டிற்க்கு நான் வரும் நாளில் உனக்கு பிடிக்காததாயினும்
எனக்கு பிடித்தமையால் மாமிசம் செய்து வைத்தாய் !

தாயுமானவர்கள் பற்றி யே கேள்வி பட்ட
நம் மண்ணில் நீ
தந்தையும் ஆனவள்.

தன் தாயை போல பெண்ணை பிள்ளையார் கூட கண்டு விட முடியும்,
ஆனால் உன்னை போன்ற பெண்ணை நான் எங்கு போய்க் காண்பது?

யார் சொன்னார்கள் விதவை தொட்டது துளங்காது என்று?
நான் என்ன துளங்காமலா போய்விட்டேன்?

நான் கோபப்பட்டால் உன் மனம் வலிக்கும்,
நான் தோழ்வியுற்றால் உன் உடல் குறுகும்,
நான் அவமானப்பட்டால் உன் கோபம் வெளிப்படும்,

இப்படி உன் உணர்ச்சிகளை எனக்காகவே அர்பணித்த
உனக்கு நான் என்ன கொடுத்து விட முடியும்,
"உங்க அம்மா உன்னை நல்லா வளர்த்து இருக்காடா"
என்று எனக்கு கிடைக்கும் பாராட்டை தவிர?

காகா - கோழி - வாத்தியார் ! ! !




காகா பிடிக்க தெரியாத மாணவனிடம்
கோழியாக மாறி முட்டை போடும்
வாத்தியார் ! ! !

கடவுளின் கடிதம் ! ! !


அன்புள்ள அருணுடய காதலியே,

எனது படைப்புகளில் உன்னதமானவளே,
என் பிரபஞ்சத்தின் மிக அழகான படைப்பே,
என் தேவதைகளை விட தூய்மையானவளே,
எனக்கு முன்னால் பிறந்து இருந்தால் என்னை விட இந்த உலகை அழகாக படைத்திருப்பாய்,
என்னால் உனக்கு நிகரான, இணையான ஒருவனை படைக்க முடியவில்லை,
என் இயலாமையை பொறுத்தருள்வாய்,
என்னால் முடிந்தது அருண் தான்,
என் தாழ்மையான பரிசாக இவனை ஏற்று கொண்டு, உன் கண்களால்
எனக்கு மோட்சம் கொடு,



நன்றி,
காதலுடன்,

கடவுள்

காதல் எதிரி ! ! !


தண்ணீர் வராத பைப்,
லேட்டாக வெந்த இட்லி,
பிய்ந்து போன செருப்பு,
வெடித்த சைக்கிள் ட்யூப்,
சில்லரை இல்லா பர்ஸ்,
பஸ்ஸில் இருந்த கூட்டம்,
அனைத்தும் என் எதிரி ஆயின
உன்னை காண தவறிய பொழுது ! ! !

வெயில் சோறு



I am writing a poem after a long time. This is dedicated to all the workers irrespective of their race and country who works in a different nation just to make sure that their family should eat three meals a day...



மணி இரண்டு, என் கையில் இருந்த திப்பின் பாக்ஸ் மண்டையில் அடிக்கும் வெயில் போலவே சுடுகிறது,
சென்ற முறை ஊர் சென்ற பொழுது அரசாங்க மருத்துவமனையில்
"உனக்கு அல்ஸர் உள்ளது சரியான நேரத்தில் உண்ண வேண்டும்" என்று சொன்னதாக ஞாபகம்.

மூடியை திறந்தேன், ராமசாமி செய்த சோறு
அவன் தலை முடியை போலவே காய்ந்து போய் இருந்தது கண்டிப்பாக விக்கல் வரும்.
அதர்க்கு ஊற்றிக்கொள்ள சிகப்புத் தண்ணீர், அதை வைத்த ஹகீமை கேட்டால் ரசம் என்பான்,
நான் வைக்கும் சாம்பார கிண்டல் செய்வான், அதனால் அவனை கேட்கவில்லை.

தொட்டுக்கொள்ள அந்தோனி வைத்த உருளைக்கிழங்கு,
அவனுக்கு எத்தனை முறை சொன்னாலும் தோள் உரித்து வெட்டி வேக வைக்க மாட்டான்,
சரியான உருளைக்கிழங்கு சோம்பேறி, அது க்ரிகெட் பந்தை விட கடினமாக இருந்தது.

இன்று எனக்கு சமையல் வேலை இல்லை,
காலையில் எழுந்து சமைய்ப்பது போன்ற ஒரு கொடுமை வேறு எதுவும் இல்லை.
சீக்கிரம் சாப்பிட வேணும் இல்லாட்டி அந்த ஸூபர்‌வைஸர் திட்டுவான்,
தேவை இல்லாமல் என் அம்மாவை அசிங்க படுத்துவான்,
எதுவும் சொல்ல முடியாது, ஊருக்கு போறதுக்கு முன்னாடி இருக்குடா உனக்கு...

முதல் வாய் எடுத்து வைத்தேன், என்ன பொழப்பு டா சாமி இது
கண்ணீர் முட்டியது, காலையில் இருந்து ஒரு வாய் கூட சாப்பிடள
அம்மா இருந்து இருந்தா இப்படி ஆகும்மா?
ஹ்ம்ம்ம் அந்த அம்மா இருக்கணும்னு தானே இந்த பொழப்பு, இருதய நோயாளி.

சரி இப்பொழுது இதை தின்ன என்ன வழி,
ரசத்தை மீண்டும் பார்த்தேன் சிகப்புத் தண்ணீர்,
இதை நான் சோற்றில் உற்றாவிட்டால்
என் தங்கைக்கு மஞ்சள் நீர் உற்றா முடியாது

உருளைக்கிழங்கை நான் தின்ணாவிட்டால்
என் தம்பி பந்து விளையாட முடியாது.

கிராமத்தில் நிலா சோறு தின்று உள்ளேன்,
சித்திர பௌர்ணமி அன்று குடும்ப ஓததுமைக்காக அம்மா
சாதம் ஊட்டி விடுவாள், அப்படி செய்தால் குடும்பம் செழிக்கும் என்பாள்
இதோ இன்று நான் உண்பது வெயில் சோறு
ஊரில் உள்ள என் குடும்பம் மூன்று வேலை சோறு தின்ன வேண்டும் என்பதற்காக !!!

மீண்டும் விக்கல் ஆனால் அதில் ஒரு இன்பம்...